கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் அமலில் உள்ள பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலான கண்காணிப்பு அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தற்போதுதான் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எட்டு லட்சத்தைக் கடந்தது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டது.
இதனால் கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நாடு முழுவதும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இதன்படி மாநிலங்களில் உள்ள கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் இயங்கும் திரையரங்குள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அரசியல், ஆன்மீனக, கோயில் திருவிழாக்கள் என அனைத்தும் நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் அமலில் உள்ள பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதேசமயம் நாட்டின் சில பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலான கண்காணிப்பு அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது
கரோன பரவல் சில இடங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதால் அந்த மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாதிப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
அதுபோலவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கரோனா தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும்.
கரோனா பரவல் பகுதிகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதனை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
பரவல் ஏற்படுவதை தடுக்க தொற்று சங்கிலியை உடைக்க வேண்டும். இதற்காக அரசு துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.