உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி ஆலயம் குளிர்காலத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க நேற்று முறைப்படி மூடப்பட்டது.
இதுதொடர்பாக உத்தரகாசி துணை ஆட்சியர் பகவத் மிஸ்ரா கூறும்போது, “கோயிலின் தலைமை குரு, ஆன்மிக தலைவர்கள், நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் மதியம் 1.15 மணிக்கு கோயில் கதவை மூடினார். இந்நிகழ்ச்சியைக் காண மிகக் கடுமையான குளிரிலும் 700 பக்தர்கள் குழுமியிருந்தனர்” என்றார்.
ஆண்டுதோறும் குளிர் காலத்தில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கங்கோத்ரி ஆலயம் மூடப்படும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால், இக்காலங்களில் அதிக பனி படர்ந்து இருக்கும். இதனால் பக்தர்கள் வந்து செல்ல இயலாது. இமய மலையில் உள்ள நான்கு சார்தாம் கோயில்களில் கங்கோத்ரியும் ஒன்று.
சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் கோயில் மூடப்பட்டதையடுத்து, பல்லக்கில் கங்கா தேவி சிலை முக்பா கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இங்குதான் குளிர்காலத்தில் கங்கா தேவிக்கு ஆராதனை, வழிபாடு நடைபெறும்.