பணி நாட்களில் அனைத்து ஊழியர்களும் தவறாமல் வேலைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில், கரோனா தொற்று பரவல் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவரும் நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பணிக்கு நேரடியாக வருவதிலிருந்து விலக்களிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் விவரம் வருமாறு:
தற்போது வரை உதவிச் செயலர்கள் பதவியில் இருப்போர்தான் தவறாமல் அலுவலகம் வரும் நடைமுறை இருந்தது. உதவிச் செயலர்கள் பதவிக்கு கீழ் இருக்கும் 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா பரவல் குறைந்து வருவதால், பணி நாட்களில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தவறாமல் வேலைக்கு வர வேண்டும். அலுவலகங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட நேரங்களில் ஊழியர்கள் பணிக்குவரும் வகையில் ஷிஃப்ட் நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். இதனை அந்தந்த துறைத் தலைவர்கள் தீர்மானிக்கலாம்.
அலுவலகக் கூட்டங்கள், பார்வையாளர்கள் சந்திப்புகளை வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையிலேயே தொடர்ந்து நடத்தலாம். ஒருவேளை, மக்கள் நலனுக்கான கட்டாய கூட்டங்கள், சந்திப்புகள் என்றால் நேரடியாக நடத்திக் கொள்ளலாம்.
கேன்டீன்களை திறந்து வைக்கலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.