மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் மேற்கு வங்கத்தில் இப்போதே தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தின் கூச்பெகர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சிப் பாதையில் ஆட்சி நடத்தி வருகிறார். ஒட்டுமொத்த நாட்டையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். முதல்வர் மம்தா பானர்ஜி அழிவுப் பாதையில் ஆட்சி நடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி நடத்தியுள்ளார். மாநிலம் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் பாஜகவுக்கு வாய்ப்பு அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கு வங்கம், தங்கவங்கமாக மாறும்.
மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதியுதவியை மம்தா பானர்ஜிதடுத்து நிறுத்தியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை முடக்கியுள்ளார். இதேபோல மத்திய அரசின் 115 நலத் திட்டங்களை தடுத்து வருகிறார். மேற்கு வங்கத்தை மம்தா அழித்து வருகிறார். மக்களுக்காக அவர் ஆட்சி நடத்தவில்லை. தனது உறவினர்களின் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்.
துர்கா பூஜை, சரஸ்வதி பூஜைநடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஜெய் ராம் நாமத்தை உச்சரிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இங்கு இல்லாமல் பாகிஸ்தானிலா ஜெய் ராம் நாமத்தை உச்சரிக்க முடியும். சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு மம்தாவே, ஜெய் ராம் என கூறுவார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 130 பாஜகதொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அரசியல் படுகொலைகளில் மேற்கு வங்கம் முதல் இடத்தில் உள்ளது.
மேற்கு வங்க மக்கள் கால்பந்து விளையாட்டை அதிகம் நேசிக்கின்றனர். ஆட்சி ஆட்டத்தில் மம்தா அரசு பல்வேறு தவறுகளை இழைத்து வருகிறது. இதை மக்கள்உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் ராமர் அட்டையை காண்பித்து மம்தாவை ஆட்சி ஆட்டத்தில் இருந்துவெளியேற்றுவார்கள். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டம்
மேற்கு வங்கத்தின் தாக்குர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா பேசும்போது, “கரோனா வைரஸ் காரணமாக குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்தவுடன் சிஏஏ சட்டத்தின் அடிப்படையில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.