நாடு முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்க கடந்த 2018-ம்ஆண்டு முதல் முறையாக ‘பரிக் ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பொதுத் தேர்வுகள் வழக்கத்துக்கு மாறாக தாமதமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 4-வது ஆண்டாக தேர்வுஎழுதும் மாணவர்களுடன் பிரதமர்மோடி விரைவில் கலந்துரையாடுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இதற்கான தேதி வெளியாகவில்லை.
இதுகுறித்து மத்திய கல்வித் துறையின் ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுவதற்கான அரிய வாய்ப்பை வழங்கும் பரிக் ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி விரைவில் நடைபெறும். இது தொடர்பான கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும்” என பதிவிடப்பட்டுள்ளது.