பாஸ்போர்ட் வழங்கப்பட வேண்டுமெனில் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக நடத்தைகளும் இனி ஆராயப்படும் என்று உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்பெல்லாம், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு எதிராக ஏதாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை மட்டுமே போலீஸார் சரிபார்த்து வந்தனர். ஆனால், தற்போது வெளிநாடு செல்லும் ஒரு நபர் ஏதாவது சமூக ஊடகங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளில் சிக்கியுள்ளாரா என்பதையும், ஆராய்வதற்கான புதிய நடைமுறையும் அமலுக்கு வர உள்ளது. இப்புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த உத்தரகாண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளது.
டேராடூனில் உத்தரகாண்ட் காவல்துறை தலைவரின் தலைமையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சமீபத்திய காலங்களில் சமூக ஊடக தளங்களின் பங்கு என்பது முக்கிய விவாதப் பொருளாக இடம்பெற்றது.
இதுகுறித்து உத்தரகாண்ட் காவல்துறைத் தலைவர் அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் நடத்தை ஆராயப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சமூக ஊடக தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இவ்வகையிலான நடவடிக்கை நிச்சயம் தேவை.
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக நடத்தைகளைச் சரிபார்க்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகத்தான் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சட்டத்தில் ஏற்கெனவே உள்ள ஒரு விதிமுறையை அமல்படுத்துவதற்கு ஆதரவான ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்கவேண்டும். மற்றபடி இதன் மூலம் புதிய அல்லது கடுமையான சட்டவிதிகள் எதையும் நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை
சமூக ஊடகங்களில் வளர்ந்து வரும் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், சமூக ஊடகப் பயனர்கள் அதிகப் பொறுப்புடன் இயங்குவதற்கும் இதுபோன்ற தடுப்புகள் அவசியம்''.
இவ்வாறு அசோக்குமார் தெரிவித்தார்.