குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவரின் வீரதீரப் பதக்கங்கள் 946 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இதில் மகாராஷ்டிராவின் ஐபிஎஸ் அதிகாரிகளான 2 தமிழர்களுக்கும் வீரதீரப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்பு சேவைகளுக்காக எனநான்கு வகைகளில் குடியரசுத்தலைவர் விருதுகள் வருடந்தோறும் அறிவிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் (பிபிஎம்ஜி) உயிர்த்தியாகம் செய்த துணை ஆய்வாளர்களான ஜார்க்கண்ட் மாநிலக் காவல் துறையின் பனுவா ஓரன் மற்றும் சிஆர்பிஎப் படையின் மோஹன் லால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. காவல் துறை வீரதீரப் பதக்கங்கள் (பிஎம்ஜி) 205 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் சிறந்த சேவைக்களுக்கான பிரிவில் குடியரசுத் தலைவர் காவல் துறை பதக்கங்கள் (பிபிஎம்)89 பேருக்கும் மற்றும் காவல் துறை பதக்கங்களுக்காக (பிஎம்) 650பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வீரதீரப் பதக்கங்கள், மகாராஷ்டிர மாநில காவல் துறையினரில் 13 பேருக்கு (பிஎம்ஜி பதக்கம்) வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பிஎம்ஜி பதக்கம் பெற்றவர்களில் ஐபிஎஸ் அதிகாரிகளான 2 தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர். வீரதீர செயலின்போது ஆத்தூரைச் சேர்ந்தஆர்.ராஜா மற்றும் வில்லிப்புத்தூரை சேர்ந்த என்.ஹரி பாலாஜிஆகியோர் கட்சிரோலி மாவட்டக் காவல் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர்களாக இருந்தனர்.
இந்த இருவருமே 2018-ல் இரு வேறு சம்பவங்களில் அப்பகுதியில் நக்ஸலைட்கள் வேட்டையை நடத்தி இருந்தனர். இதில் ராஜாசெய்த என்கவுன்ட்டரில் மூன்று நக்ஸலைட்கள் கொல்லப்பட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ராஜா, கோயம்புத்தூர் சிஐடி கல்லூரியில் பயின்று விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றியவர். பின்னர் அமெரிக்காவிலும் பணியாற்றினார். அப்போது பணியை ராஜினாமா செய்துவிட்டு, 2012-ல்ஐபிஎஸ் அதிகாரியான அவருக்குமகாராஷ்டிர மாநிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது ராஜா பீட் மாவட்ட எஸ்பியாக பணியாற்றுகிறார்.
மற்றொருவரான ஹரி பாலாஜி, மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்ற பின் 2013-ல்ஐபிஎஸ் அதிகாரி ஆனார். அமராவதி மாவட்ட ஊரகப் பகுதியின் எஸ்பியாக இருக்கும் இவரும் 2018-ல் முக்கிய நக்ஸலைட்டை என்கவுன்ட்டர் செய்தவர் ஆவார்.