டெல்லி ஐடிஓ பகுதியில் போலீஸாருக்கும், விவசாயிகளில் ஒரு பிரிவினருக்கும் இடையே நடந்த மோதல்: படம் ஏஎன்ஐ 
இந்தியா

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: டெல்லி போலீஸார் 15 முதல் தகவல் அறிக்கை பதிவு 

ஏஎன்ஐ


டெல்லியில் நேற்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 15 முதல்தகவல் அறிக்கையை டெல்லி போலீலஸார் பதிவு செய்துள்ளனர் என டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசுதினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால், விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.

இதில் போலீஸாருக்கும், விவசாயிகளில்ஒருபிரிவினருக்கும் பல்ேவறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர். டெல்லியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் 83 போலீஸார் காயமடைந்தனர் என்று டெல்லி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் சார்பில் 15 முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 முதல்தகவல் அறிக்கை கிழக்கு மண்டலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி ஐடிஓ பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து டெல்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து பெரும்பகுதி நிறுத்தப்பட்டது. டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ஹரியானா, டெல்லி எல்லைகளான சிங்கு, காஜிப்பூர், திக்ரி, முகார்பா சவுக், நாங்லோய், ஆகிய பகுதிகளில் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT