இந்திய அலுமினிய நிறுவனம் (நால்கோ), 2027-28ம் நிதியாண்டுக்குள் விரிவாக்கத் திட்டங்களில் ரூ.30,000 கோடி முதலீடு செய்யவுள்ளது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
நால்கோ நிறுவனத்தின் 41வது நிறுவன தினம், புவனேஸ்வரில் உள்ள அதன் தலைமையத்தில் இன்று நடந்தது. இதில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலத் ஜோஷி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த முதலீட்டிலிருந்து, 5வது சுத்திகரிப்பு ஆலை, பொட்டாங்கி பாக்சைட் சுரங்கம், பாக்சைட் போக்குவரத்து அமைப்பு, உத்கல் பகுதியின் டி மற்றும் இ நிலக்கரி சுரங்கங்கள் ஆகியற்றுக்கு நால்கோ நிறுவனம் ரூ.7,000 கோடி முதலீடு செய்யும். மீதமுள்ள 22,000 கோடி உருக்கு உலை, மின் உற்பத்தி மைய விரிவாக்கத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள உருக்கு உலையின் விரிவாக்கம், 1400 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளும் இதில் அடங்கும்.
“இந்த லட்சிய வளர்ச்சி திட்டங்களுடன், நால்கோ நிறுவனம் எதிர்காலத்தில், அலுமினியம் மற்றும் அலுமினியம் சார்ந்த துறைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும், உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கான தற்சார்பு இந்தியாவை அடையும்’’ என அமைச்சர் பிரகலத் ஜோஷி கூறினார்.
நாட்டின் கனிம வள உற்பத்தியில் உள்ள இடையூறுகளைத் தவிர்க்க, கனிம வளம் அதிகம் உள்ள ஒடிசா மாநிலத்துக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மத்திய அரசு வழங்குகிறது என்றும் அமைச்சர் கூறினார். ஒடிசா அரசின் வேண்டுகோள்படி, கனிம உற்பத்தி சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யவும், அக்கறையற்றவர்கள் சுரங்க ஏலத்தில் பங்குபெறுவதற்கு தடை விதிக்கவும் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரும் என அவர் வலியுறுத்தினார்.