இந்தியா

அதிகரித்து வரும் கோவிட் பாதிப்புகளை கட்டுப்படுத்துங்கள்: மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மகாராஷ்டிரா, கேரளா, சத்திஸ்கர் மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

குறிப்பிட்ட நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள காரணத்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளில் இருந்து வழங்கப்படும் தளர்வுகள் கொரோனா பரவலை தடுப்பதில் இது வரை அடைந்துள்ள நன்மைகளை கெடுத்துவிடக்கூடாது என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் வட்ட அளவுகளில் கொரோனா பாதிப்புகளின் அதிகரிப்பை ஆராயுமாறும், அதற்கேற்ப பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய மொத்த பாதிப்புகளில் 59 சதவீதம் மகாராஷ்டிரா, கேரளா, சத்திஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ளன. கேரளாவில் கடந்த இரு வாரங்களாக குறைந்துள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை குறித்தும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT