இந்தியா

கரோனா தொற்று: 24 மணிநேரத்தில் 20,346 பேர் பாதிப்பு; குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது

செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 20,346 பேர் பாதிக்கப்பட்டனர். கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் மொத்த எண்ணிக்கை 1,00,16,859 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,346 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,03,95,278ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,00,16,859 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 19,587 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,28,083 ஆகக் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 –வது நாளாக 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 222 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,50,336 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT