2020-ம் ஆண்டில் வடக்கு இந்தியப் பெருங்கடலில் 5 புயல்கள் உருவானது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
2020-ம் ஆண்டில் நாட்டின் பருவநிலை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* 2020-ம் ஆண்டில் இந்தியாவின் ஆண்டு சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை +0.29 டிகிரி செல்சியஸ். இது இயல்பை விட அதிகம். 1901ம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட கணக்குப்படி, இது 8வது அதிக வெப்ப ஆண்டு. ஆனால் கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்டதை விட (+0.71 டிகிரி செல்சியஸ்) குறைவு.
* 2020-ம் ஆண்டு நாட்டின் மழைப் பொழிவு, நீண்ட கால சராசரி அடிப்படையில் (1961-2010) 109 சதவீதம். இதுவும் இயல்பை விட அதிகம்.
* தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை, மத்திய இந்தியா, தெற்கு தீபகற்ப பகுதி, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதியில் மழைப்பொழிவு நீண்ட கால சராசரி அடிப்படையில் முறையே 115, 129, 106 சதவீதமாக இருந்தது. வடமேற்கு இந்தியாவில் 84 சதவீதமாக இருந்தது.
* 2020-ம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) நாட்டின் மழைப் பொழிவு 101 சதவீதம்.
இந்தியக் கடல்களில் ஏற்பட்ட புயல்கள்
* 2020-ம் ஆண்டில் வடக்கு இந்தியப் பெருங்கடலில் 5 புயல்கள் உருவாயின. அம்பன், அதி தீவிர புயல்களான நிவர் மற்றும் காத்தி, நிசர்கா, புரவி ஆகிய புயல்கள் உருவாயின. இவற்றில் நிசர்கா, காத்தி ஆகியவை அரபிக்கடலிலும், மற்றவை வங்காள விரிகுடாவிலும் உருவாயின.
* பருவமழைக் காலத்துக்கு முன் ஏற்பட்ட அம்பான் புயல், மேற்கு வங்கத்தில் மே 20ம் தேதி கரையைக் கடந்தது. அப்போது அங்கு 90 பேர் பலியாயினர். 4,000 கால்நடைகளும் பலியாயின.
* நிசர்கா புயல் மகாராஷ்டிராவில் ஜூன் 3ம் தேதி கரையைக் கடந்தது.
* மற்ற 3 புயல்கள் நிவர், புரவி, காத்தி ஆகியவை, மழைக் காலத்துக்கு பின் உருவாயின. நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரை கடந்தது. இதில் 12 பேர் பலியாயினர், 10,836 கால்நடைகள் பலியாயின.
* புரவி புயலால் தமிழகத்தில் 9 பேர் பலியாயினர், 200 கால்நடைகளும் பலியாயின.