கோப்புப்படம் 
இந்தியா

1901-லிருந்து 8-வது வெப்பமான ஆண்டு 2020; கடந்த 20 ஆண்டுகளாக வெப்பம் அதிகரிப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

பிடிஐ

1901-ம் ஆண்டிலிருந்து 8-வது வெப்பமான ஆண்டாக 2020 அமைந்திருக்கிறது. ஆனால், 2016-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது குறைவுதான் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''1901-ம் ஆண்டிலிருந்து 8-வது வெப்பமான ஆண்டாக 2020-ம் ஆண்டு அமைந்திருக்கிறது. 2006-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்கு இடையே 12 ஆண்டுகள் அதிகமான வெப்பம் இருந்தது.

1901 முதல் 2020-ம் ஆண்டுவரை அதாவது 100 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுதோறும் 0.62 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதில் அதிகபட்சமாக 0.99 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. குறைந்தபட்சமாக அதிகரித்த வகையில் 0.24 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

2020-ம் ஆண்டில் 0.29 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. 1901-ம் ஆண்டிலிருந்து 8-வது வெப்பமான ஆண்டாக 2020 இருக்கிறது. ஆனால், 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான். 2016-ல் 0.71 டிகிரி செல்சியல் வெப்பம் அதிகரித்திருந்தது.

இதுவரை 2016 (0.70 டிகிரி செல்சியஸ்), 2009 (0.55 டிகிரி செல்சியஸ்), 2017 (0.541 டிகிரி செல்சியஸ்), 2010 (0.539 டிகிரி செல்சியஸ்), 2015 (0.42 டிகிரி செல்சியஸ்) ஆகிய ஆண்டுகள் வெப்பமான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த 20 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு நீண்ட கால சராசரி அடிப்படையில், 1961-2000ஆம் ஆண்டு புள்ளிவிவர அடிப்படையில் 109 சதவீதம் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இது சராசரி மழைப்பொழிவுக்கும் அதிகமாகும். அதிலும் குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையில் 117.7 சதவீதம் மழை பதிவாகியுள்ளது.

2020-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையில் நீண்டகால சராசரி அடிப்படையில் 101 சதவீதம் அதாவது சராசரி மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு மழை இதுவரை 1,565 பேரும், இடி தாக்கி 815 பேரும் உயிரிழந்துள்ளனர். புயல் காரணமாக 115 பேரும் உயிரிழந்தனர். 17 ஆயிரம் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT