ராப்ரிதேவி | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

பிஹாரில் நிதிஷ் குமார் ஆட்சி நீண்ட காலம் தாங்காது: ராப்ரி தேவி பேட்டி

பிடிஐ

பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நீண்ட காலம் தாங்காது என்று பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தெரிவித்தார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரும் பிஹாரின் முன்னாள் முதல்வருமான ராப்ரிதேவியின் 65- வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. அவரை வாழ்த்துவதற்காக ஏராளமான ஆர்.ஜே.டி ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை ராப்ரி தேவியின் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ராப்ரி தேவி கூறியதாவது:

''அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு மக்கள் அனைவருக்கும் வளமாக இருக்கட்டும்.

பிஹாரைப் பொறுத்தவரை நிதிஷ்குமாரின் ஆட்சி இனி சொந்த பலத்தில் இயங்காது. காரணம் ஐக்கிய ஜனதா தளத்தின்மீது பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் தற்போது கூட்டணி அரசாங்கம் சீராக செயல்படவில்லை. இப்படியே போனால் நிதிஷ் ஆட்சி நீண்ட காலம் தாங்காது.

அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பு இதைப் பற்றி அவர் கவனமாக யோசித்திருக்க வேண்டும். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது இடத்தில்தான் உள்ளது.

அங்கு அமைச்சரவையில் ஏற்படும் மாற்றத்தில், நிதிஷ் குமாருக்கு விசுவாசமாகவும், அவரது நலன்களை அக்கறை கொண்டவர்களைக அறியப்படுபவர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களில் ஓரங்கட்டப்படுவார்கள்.

இவ்வாறு ராப்ரிதேவி தெரிவித்தார்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் உடல்நலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராப்ரி தேவி, ''மருத்துவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவரது சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லாலு பிரசாத்தும் மருத்துவரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்'' கூறினார்.

நடந்து முடிந்த பிஹார் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 243 இடங்களில் பாஜக 74 இடங்களை கைப்பற்றியது. ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தில் அமரவில்லையென்றாலும் அதிகபட்சமாக 75 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT