சிவசேனா மூத்தத் தலைவரும், சாம்னா நாளேட்டின் ஆசிரியரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு பிஎம்சி வங்கி மோசடி வழக்கில் நாளை (29-ம்தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிஎம்சி வங்கி சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு அனுப்பப்படும் 3-வது சம்மன் இதுவாகும். இதற்கு முன் அமலாக்கப்பிரிவு இரு முறை சம்மன் அனுப்பப்பட்டபோது, உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை. சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் இந்த சம்மனை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வர்ஷா ராவத்துக்கு அனுப்பியுள்ளனர்.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மிகப்பெரிய ஊழல் நடந்தது தெரியவந்தது. ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராகேஷ் குமார் வாதவான், அவரின் மகன் சாரங் வாதவான், முன்னாள் தலைவர் வார்யம் சிங், முன்னாள் இயக்குநர் ஜோய் தாமஸ் ஆகியோர் வங்கியில் கடன் பெற்று பல கோடிகள் மோசடி செய்தது அம்பலமானது.
இதையடுத்து, மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிஎம்சி வங்கிக்கு ரூ.4,355 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இதை அடிப்படையாக வைத்து மத்திய அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆனால், மகாராஷ்டிராவில் ஆளும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கொண்ட மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு கூறுகையில், "தேவையின்றி அமலாக்கப்பிரிவு இந்த விவகாரத்தில் எங்களைக் குறிவைக்கிறது" என்று குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில் வங்கியிலிருந்து கணக்கில் வராத பணம் எடுத்ததாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரிடம் விசாரிக்க அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.
இது தவிர, பாஜகவில் இருந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்ஸே கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கும் பிஎம்சி வங்கியில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 30-ம் தேதி மும்பையில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஏக்நாத் கட்ஸே ஆஜராக உள்ளார்.