நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை டெல்லியில் பிரதமர் மோடி நாளை(28-ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியி்ட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி டிசம்பர் 24-ம்தேதியுடன் 18 ஆண்டுகள் நிறைவடந்துள்ளது. மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவையை 28-ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
37 கி.மீ. தூரம் கொண்டமெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுமாகும் இந்த சேவையை பிரதமர் மோடி காணொலிமூலம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.
தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சிபிடிசி எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இது செயல்படுத்தப்படும். முந்தைய மெட்ரோ ரயில் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில் சேவையை விட இது மிகவும் பாதுகாப்பானதாகும். மக்கள் அதிகம் பயணிக்காத நேரங்களில் சோதனை அடிப்படையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு பார்க்கப்பட்டது.
பயணிகள் அவசர காலத்தில்பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. மனிதர்கள் தேவைப்படாத வகையில் செயல்படும் விதமாக இந்த மெஜந்தா நிற மார்க்கத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்த உள்ளார். இந்த கார்டு வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்த முடியும்.
டெல்லி மெட்ரோரயில் நிறுவனம் பிரத்தியேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது. இந்த அட்டை மூலம் பஸ்பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்டஅனைத்தையும் மேற்கொள்ளலாம். வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம். இந்த அட்டை மூலம் பணம் கூட ஏடிஎம்களில் எடுத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.