திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, மண்டல கால பூஜைக்கு சபரிமலை கோயில் நடை திறந்தபோது வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வார நாட்களில் 2,000 பேரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பேரும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், ‘‘சபரிமலையில் தற்போது கரோனா பரவல் பெருமளவு அதிகரித்து வருகிறது. எனவே இந்த சூழ்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை கூடும்போது நோய் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என கோரப்பட்டுள்ளது.