இந்தியா

கர்நாடகாவில் ஜன. 2 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் வரும் ஜனவரி 2-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உருமாறிய கரோனா வைரஸ்தொற்று பரவலை தடுப்பதற்காக‌ கர்நாடகாவில் வியாழக்கிழமை இரவு முதல் வரும் ஜனவரி 2-ம் தேதி வரை இரவு நேர‌ ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தேன். கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலத்தில் இத்தகைய உத்தரவால் பொதுமக்களும் வியாபாரிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என மக்கள் கருத்து தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து துணை முதல்வர்கள், அமைச்சர்கள், கரோனா தடுப்பு தொழில்நுட்பக் குழு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

இதன் அடிப்படையில், ஜனவரி 2‍-ம் தேதிவரை விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. எனவே மக்களும், வியாபாரிகளும் வழக்கம் போல செயல்படலாம். அதே வேளையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு இரவு நேர கொண்டாட்டங்களுக்கு தடைதொடரும்.

இவ்வாறு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT