இந்தியா

பிரதமர் கிசான் திட்டம்; அடுத்த தவணையை  பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார்

செய்திப்பிரிவு

பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை வரும் 25-ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி 25-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிடவிருக்கிறார். பிரதமர் ஒரு பொத்தானை அழுத்தியவுடன் 9 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி உதவி அவர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நிகழ்ச்சியின்போது பிரதமர் கலந்துரையாடுவார். பிரதமர் கிசான் திட்டத்தில் தங்களது அனுபவங்கள் குறித்தும், விவசாய நன்மைக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

SCROLL FOR NEXT