இந்தியா

தாத்ரி படுகொலை, மாட்டிறைச்சி விவகாரம்: சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்களை நேரில் அழைத்து அமித் ஷா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தாத்ரியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது, மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் தலைவர்களை நேரில் அழைத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்தார். இனிமேல் அப்படி பேசக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி உண்ட தாக இக்லாக் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் கூறும்போது, ‘‘முஸ்லிம்கள் இந்தியாவில் வாழலாம். ஆனால், மாட்டிறைச்சி உண்பதை நிறுத்த வேண்டும்’’ என்றார். ‘‘தாத்ரி படுகொலை ஒரு விபத்து’’ என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார். எம்எல்ஏ சங்கீத் சாம் என்பவர் கூறும்போது, ‘‘தாத்ரி சம்பவத்தில் அப்பாவிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய் கின்றனர். தொடர்ந்து இதுபோல் நடந்தால், கடந்த 2013-ம் ஆண்டு முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரம் போல், திருப்பி பதிலடி தருவோம்’’ என்று பேசினார். தவிர மத்திய கலாச்சார துறை அமைச்சர் சாக் ஷி மகராஜ் தொடர்ந்து சர்ச்சைக் குரிய வகையில் பேசி வருகிறார். இதனால் பாஜக.வுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் மேற்கூறிய தலைவர்களை, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று டெல்லிக்கு நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார். தாத்ரி சம்பவம் வேதனையானது, துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் மோடி கூறிய பிறகு, சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. இனிமேல் இப்படி பேசக் கூடாது என்று அந்த தலைவர்களை அமித் ஷா கடுமையாக எச்சரித்தார் என்று பாஜக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

மேலும் இதுபோல் சர்ச்சைக் குரிய வகையில் பேசுவது, பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களை தடம்புரள செய்து விடும். உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி புரியும் சமாஜ்வாடி கட்சி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த தவறி விட்டது. ஆனால், மூத்த தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் எதிர்ப்பு எல்லாம் பாஜக மீது திரும்பி உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அமித் ஷா எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT