உத்தரப் பிரதேசம் லலித்பூரில் ஒரு டஜன் பசுக்கள் இறந்தன. இதனால், அங்கு ஆளும் பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்துக்கள் புனிதமாகக் கருதும் பசுக்களின் பாதுகாப்பில் பாஜக ஆளும் அரசுகள் அதிக கவனம் எடுப்பதாகக் கூறி வருகின்றனர். இதற்காக, உ.பி.யில் பசுக்களின் பாதுகாப்பிற்காக அரசு மற்றும் பொதுநல அமைப்புகளின் பல ஆயிரம் கோசாலைகள் செயல்படுகின்றன.
இவற்றில் அவ்வப்போது பல்வேறு காரணங்களால் பசுக்கள் இறப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்தவகையில், உ.பி.யின் புந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ள லலித்பூரின் சவுஜானாவின் அரசு கோசாலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஒரு டஜன் பசுக்கள் இறந்துள்ளன.
இதன் மீதான வீடியோ பதிவு புந்தேல்கண்ட் பகுதிவாசிகளின் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இப்பிரச்சினையில் லலித்பூர் மாவட்ட ஆட்சியரான ஏ.தினேஷ்குமார் உடனடியாக அக்கோசாலைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதில் தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கரூரைச் சேர்ந்த தமிழரான ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். அக்கிராமப் பஞ்சாயத்து அதிகாரிகளான சவுரப் யாதவ், கன்ஷியாம் தாஸ் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, முன்னாள் மத்திய இணை அமைச்சரும் உ.பி. காங்கிரஸின் மூத்த தலைவருமான பிரதீப் ஜெயின் ஆதித்யா தலைமையில் லலித்பூரில் போராட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதற்கு முன் உ.பி.யின் அலிகரில் உள்ள கோசாலையில் கடந்த ஜனவரியில் 5 நாட்களில் 58 பசுக்கள் இறந்தன. இதில் அதை நடத்திய சமூகப் பொதுநல அமைப்பினர் ரூ.2.5 லட்சம் அரசு நிதி பெற்றும் பசுக்களுக்கு முறையான தீனி வழங்காதது காரணமானது.