இந்தியா

வேளாண் சட்டத்தை வாபஸ் பெற 10 நிபுணர்கள் அரசுக்கு கடிதம்

செய்திப்பிரிவு

புதிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்றுகோரி 10 பொருளாதார நிபுணர்கள் காரணங்களோடு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வேளாண் சட்டங்களைத் தீரஆய்வு செய்ததில் இருந்து விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் இல்லை, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களாகவே இவை வகுக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் சிறு விவசாயிகள் பயன்அடைய வேண்டுமெனில் விவசாயிகளின் வருமானம் உயர வேண்டுமெனில் வேளாண் பொருட்களின் விற்பனை சந்தையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனினும்தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களில் அதற்கான எந்தஅம்சங்களும் இல்லை. இந்த சட்டங்கள் தவறான அனுமானங்கள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

வேளாண் சந்தையை ஒழுங்குபடுத்துவதில் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை மத்திய அரசுகட்டுப்படுத்தும் வகையில் அல்லது பறிக்கும் வகையில் இந்தசட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சந்தைகளை ஒருங்கிணைப்பது, கட்டுப்பாட்டில்கொண்டு வருவது சிறு விவசாயிகளின் நலனைப் பாதிக்கும்.

ஏபிஎம்சி சந்தைக்கு வெளியில் உருவாகும் சந்தை, மோனோபாலி ஆதிக்கத்தை உண்டாக்கும்.

ஒப்பந்த விவசாயத்தில் சிறு விவசாயிகளுக்கு எதிராக பெரு நிறுவனங்கள் களமிறங்கும். மாநில அரசு விதிமுறைகளின் கட்டுப்பாடுகளுக்குள் பெரு நிறுவனங்கள் வரும் வகையில் சட்டங்கள் இல்லாததால், வேளாண் சந்தையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

இப்படி 5 காரணங்களை கூறி விவசாயிகளின் நலனை பாதிக்கும் இந்தச் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT