டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம் 
இந்தியா

மாநிலங்களின் உரிமைகளை ஆக்கிரமிக்கிறது மத்திய அரசு: மே.வங்க விவகாரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் சாடல்

பிடிஐ

மேற்கு வங்கத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு மாற்றக் கோரி மத்திய அரசு மம்தா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு ஆக்கிரமிக்கிறது. கூட்டாட்சி மீதான தாக்குதல் என விமர்சித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்துக்கு கடந்த வாரம் வந்தபோது அவரின் பாதுகாப்புவாகனம் தாக்கப்பட்டது. இதையடுத்து தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபிக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால், அவர்களை டெல்லிக்கு அனுப்ப முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இதையடுத்து நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் இருந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் மத்தியப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது.

மேற்கு வங்க போலீஸ் ஐ.ஐி. ராஜீவ் மிஸ்ரா, டிஐஜி பிரவீன் குமார் திரிபாதி, டைமண்ட் ஹார்பர் மாவட்ட எஸ்.பி. போலா நாத் பாண்டே ஆகியோரை மத்திய அரசுப் பணிக்கு மாற்றிப்பட்டனர்

ஆனால், அந்த அதிகாரிகள் மூவரையும் இன்னும் மாநிலப் பணியிலிருந்து விடுவிக்காமல் மேற்கு வங்க அரசு வைத்துள்ளது. இதை நினைவூட்டி மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மேற்கு வங்க அரசுக்குக் கடிதம் எழுதியது.

மத்திய அரசின் இந்த செயலைக் கண்டித்த முதல்வர் மம்தா பானர்ஜி, அப்பட்டமான விதிமுறை மீறல். மத்திய அரசின் செயல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று சாடினார்.

மேற்கு வங்க அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கண்டித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மேற்கு வங்க அரசின் நிர்வாகத்தில் அப்பட்டமாக மத்திய அ ரசு தலையிடுவதைக் கண்டிக்கிறேன்.

தேர்தலுக்கு முன்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு மாற்றும் மத்திய அரசின் செயல், மாநில அரசின் உரிமைகளை ஆக்கிரமிப்பதாகும். கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல், கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT