பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனை முன்கூட்டியே விடுதலை செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் 4 ஆண்டு சிறை தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் சசிகலாவும் இளவரசியும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை கடந்த மாதம் நீதிமன்றத்தில் செலுத்தினர்.
இதையடுத்து, சசிகலா வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், வி.என்.சுதாகரன் கடந்த செப்டம்பரில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நினைவூட்டல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''இவ்வழக்கில் 1996-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 92 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். எனவே எனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையில் இந்த 92 நாட்களை கழித்து, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்'' எனக் கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதி ஷிவராம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுதாகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மூர்த்தி ராவ், “வி.என்.சுதாகரன் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை காட்டிலும் 40 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இனியும் கால தாமதம் செய்யாமல் அவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்'' என வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதி ஷிவராம், “வி.என்.சுதாகரன் இன்னும் இவ்வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தவில்லை. அவர் அபராதம் செலுத்திய பின், இவ்வழக்கில் ஏற்கெனவே சிறையில் இருந்த நாட்களை கணக்கில் கொண்டு சுதாகரனை சிறைத்துறை முன்கூட்டியே விடுவிக்க அனுமதி வழங்கப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
இந்த ஆணையை வழக்கறிஞர் மூர்த்தி ராவ் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளரிடம் நேற்று வழங்கினார். மேலும் வி.என்.சுதாகரனின் தரப்பில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சசிகலா, இளவரசிக்கு முன்னதாக வி.என்.சுதாகரன் இன்னும் சில தினங்களில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.