விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று ஹரியாணா முதல்வர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியாணா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த மூன்று வாரங்களாக டெல்லி எல்லைகளுக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த சீக்கிய மதகுரு பாபா ராம்சிங் நேற்று மாலை போராட்டக் களம் அருகே தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகள் போராட்டத்தின் நடுவே சீக்கிய மதகுரு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சீக்கிய மதகுருவின் மரணம் குறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
ஹரியாணா குருத்வாராவைச் சேர்ந்த சீக்கிய மத குரு, பாபா சாந்த் ராம் சிங் வயது 65, கர்னல் மாவட்டத்தின் நிசிங் பகுதியில் உள்ள சிங்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்.
பஞ்சாப், ஹரியாணா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஹரியாணாவைச் சீக்கிய மதகுரு டெல்லியின் சிங்கு எல்லை அருகே நடந்த போராட்டத்தில் நேரில் வந்து தனது ஆதரவைத் தெரிவித்தார். பின்னர், சீக்கிய மதகுரு பாபா ராம்சிங் டெல்லி சோனிபட் சாலையில் குன்லி என்ற இடத்தில் போராட்ட இடம் அருகே அவர் தனது காரில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
உடனடியாக அவர் பானிபட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுவருவதாக சோனிபட் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறிதது போலீஸார் கூறுகையில், 'ராம் சிங், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவரிடமிருந்து காவல்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தற்கொலை செய்துகொண்ட இடத்திலிருந்து பாபா ராம் சிங் பஞ்சாபியில் ஒரு கையால் எழுதப்பட்ட குறிப்பை விட்டுச் சென்றுள்ளளார். அதில் "விவசாயிகளின் வலியைதாங்க முடியவில்லை'' என்று ராம்சிங் எழுதியுள்ளதாகவும், போலீஸார் தெரிவித்தனர்.
ஹரியாணா முதல்வர் இரங்கல்
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவளித்த சீக்கிய மதகுரு பாபா ராம் சிங் தற்கொலை செய்து கொண்டமை குறித்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், "பாபா ராம் சிங் இறந்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்தார், மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்ந்தார்" என்று தெரிவித்துள்ளார்.