இந்தியாவில் அதிகமான ஜனநாயகம் இருக்கிறது என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார். அதிகமான அதிகாரத்துவம் இருக்கிறது என ஜனநாயகவாதி ஒருவர் கூறுகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் துணைத் தலைவர் அமிதாப் காந்த், சமீபத்தில் ஜனநாயகம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதில் அளித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும், உ.பி. அரசு கொண்டுவந்துள்ள லவ் ஜிகாத் சட்டம், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் குறித்தும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “இந்தியாவில் அதிகமான ஜனநாயகம் இருப்பதாக அதிகாரி ஒருவர் கண்ணீர் விடுகிறார். இங்கு அதிகமான அதிகாரத்துவம் இருப்பதாக ஜனநாயகவாதி வேதனைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், “சுதந்திரமான ஜனநாயகத்தின் இடிபாடுகளின் மீது புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்று புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டுவிழா குறித்து சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உ.பி. அரசு கொண்டுவந்த லவ் ஜிகாத் குறித்த சட்டம் குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில், “அமைதி, இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுக்கும் உத்தரப் பிரதேச அரசு நோபல் பரிசு பெறத் தகுதியானது.
புதிய சட்டங்களை இயற்றுவதிலும், அதை அமல்படுத்துவதிலும் உ.பி. அரசு மிகவும் புத்தாக்கத்துடன் செயல்படுகிறது. லவ் ஜிகாத் என அழைக்கக்கூடிய குற்றத்தை வேறு யார் கண்டுபிடித்திருக்க முடியும்.
உ.பி. அரசு சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது. இதற்கு 3 உதாரணங்கள் உள்ளன.
முதலாவதாக, எந்தவிதமான புகாரும் இன்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இரண்டாவதாக அந்த முதல் தகவல் அறிக்கை உடனடியாக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டாக மாற்றப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துகள் பறிக்கப்படும் என மிரட்டப்படுகிறது. மூன்றாவதாக எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையின்றிக் கைது நடக்கிறது” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.