இந்தியா

சமூக வலைதள சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடாது- அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கருத்து

செய்திப்பிரிவு

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சமூக வலைதளங்களில் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் தழைத்திருக்கும். எனினும் எல்லை வரம்பை மீறக்கூடாது. அவ்வாறு வரம்பு மீறும்போதே உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது.

என்னைப் பொறுத்தவரை சமூக வலைதள சுதந்திரத்துக்கு அரசு கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. ஆரோக்கியமான ஜனநாயகத் துக்கு வெளிப்படையான விவாதங்கள் தேவை. சமூக வலைதளம் தொடர்பான மிக அரிதான வழக்குகளை மட்டுமே உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

சில விவகாரங்களில் வழக்கு தொடர எனது ஒப்புதலை கோருகின்றனர். பெரும்பாலும் நான் ஒப்புதல் வழங்குவது இல்லை. அத்தகைய கோரிக்கைகள் விரைவில் மறைந்துபோகும்.

எனக்கு இப்போது 89 வயதாகிறது. 90-வது வயதில் நான் ஓய்வு பெறுகிறேன். வேறு எந்த நாட்டிலும் 90 வயதில் அட்டர்னி ஜெனரலாக யாரும் பணியாற்றவில்லை. இது கடினமான பணி. வாரத்தில் 7 நாட்களும் பணியாற்ற வேண்டும். 90 வயதுக்குப் பிறகு ஓய்வை விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒருவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT