இந்தியா

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் அடுத்த வாரம் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அடிக்கல் நாட்டுவார் என மக்களவைத் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லா தெரிவித்தார்.

'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம் இப்போதுள்ள கட்டிடத்தின் அருகே அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கட்டிடம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. ஆனால் புதிய கட்டிடம் முக்கோண வடிவில் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டிடம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ரூ.861.9 கோடி செலவில் கட்டித்தருவதாக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் டெண்டரில் தெரிவித்தது. இதையடுத்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று கூறும்போது, “புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடியை அழைக்க நான் நேரில் வந்தேன்” என்றார்.

SCROLL FOR NEXT