எம்டிஹெச் மசாலா பிராண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் தரம்பால் குலாடி (97) காலமானார். வயது மூப்பு காரணமாக சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்தார்.
தொழில்துறை வட்டாரத்தில் மகஷே என அறியப்பட்டவர். மசாலா பொருட்களை வட இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பிரபலமானவர்.
தலைப்பாகை, முத்துமாலை அணிந்தபடி இருக்கும் இவரது புகைப்படம்தான் இவரது தயாரிப்புகளின் அடையாளம். பலரும் சமூக வலைதளங்களில் இவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர். கடந்த ஆண்டுதான் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ரூ.1,500 தொகையுடன் டெல்லிக்கு வந்துள்ளார். கரோல்பாக்கில் தனது முதலாவது விற்பனையகத்தைத் தொடங்கி அதில் இருந்து விரிவுபடுத்தினார். கடந்த 1959-ம் ஆண்டு எம்டிஹெச் நிறுவனத்தை உருவாக்கினார்.