மத்திய அரசின் ஜன்தன் கணக்கு மற்றும் அரசின் நேரடி பண பரிமாற்றம் (டிபிடி) ஆகியவை காரணமாக கிராமப் பகுதிகளில் ஏடிஎம்.களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் இயங்கும் ஏடிஎம்.கள் கூட அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் 2 சதவீத அளவுக்கு பயன்படுத்தப்பட்ட ஏடிஎம்.கள் தற்போது 12 சதவீத அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் டெபிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2020 நிலவரப்படி டெபிட் கார்டு பயன்படுத்துவோர் 86 கோடியாகும். இவற்றில் பிரதமரின் ஜன்தன் கணக்குக்கு வழங்கப்பட்ட ரூபே கார்டுகளின் அளவு 35 சதவீதம். அதாவது 30 கோடி கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கரோனா காலத்திலும் கிராமப் பகுதிகளில் நுகர்வு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. நகர்ப்பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கிராமப் பகுதிகளை வெகுவாக பாதிக்கவில்லை என்று பிடிஐ பேமென்ட் நிறுவனத்தின் சிஇஓ கே.னிவாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் 9.5 சதவீதமாக இருந்த ஏடிஎம் பயன்பாடு 2020 செப்டம்பரில் 12 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு ஆண்டுக்கு 3 சதவீத அளவுக்கு வளர்ச்சியை சந்தித்து வருகிறது. வங்கிகள் செயல்படுத்தும் ஏடிஎம்.களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகும். இதில் தனியார் நிர்வகிக்கும் ஏடிஎம்.களின் பயன்பாடு 14 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.