ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்கை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமதுவை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஐஎம்ஏ நிதி நிறுவனம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது. இவ்வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் முகமது மன்சூர்கான் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்கை கைது செய்தனர். முன்னாள் ஐஜிபி ஹேமந்த் நிம்பல்கரையும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் விசாரித்தனர்.
இவர்கள் 3 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க், சாம்ராஜ் பேட்டை எம்எல்ஏ ஜமீர் அகமது கான் உள்ளிட்டோருக்கு ஐஎம்ஏ நிதி நிறுவனம் சார்பில் ரூ.80 கோடி நிதி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜமீர் அகமது கானை விசாரித்தது. தற்போது மீண்டும் சிபிஐ விரிவாக விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நேற்று ஜமீர் அகமது கானை சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்போவதாக தகவல் வெளியானது. அதனை மறுத்த ஜமீர் அகமது கான், சிக்கப்பள்ளாப்பூரில் உள்ள சாய் பாபா கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.