இந்தியா

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

செய்திப்பிரிவு

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:

புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர்.

புதிய வேளாண் சட்ட விதிகளை அமல்படுத்த அவர்கள் அனுமதித்தால் விவசாயிகளின் வருமானம் உயரும். குறிப்பிட்ட சில மாநிலங்களில் விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மத்திய அரசு நிர்ணயித்தபடி 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த புதிய வேளாண் சட்டம் நிச்சயம் உதவும்.

இந்தச் சட்டங்களால் அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் பொருட்களை வாங்கிஇருப்பில் வைப்போர் மீதானகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள் ளன. இதனால் கள்ளச்சந்தை வர்த்தகர்களுக்கு வழியேற்படும் என விவசாயிகள் போராடுகின்றனர்.

ஆனால், அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் போது இதை அமல்படுத்த முடியும். அதாவது பொருட்களின் விலை 50 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் போது இதை அமல்படுத்த முடியும்.

அதேபோல வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவற்றின் விலை 100 சதவீதம் உயரும் போது அத்தியாவசிய பொருள் தடுப்பு சட்டத்தை அமல்படுத்த முடியும்.

மாநில அரசுகள் விரும்பினால் இருப்பில் வைத்துக் கொள்வதற்கான வரம்புகளை நிர்ணயிக்கலாம். இதேபோல நிறுவனங்களுக்காக பயிரிடும் (கார்ப்பரேட் ஃபார்மிங்) முறையை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம். யாரையும் எந்த நிறுவனமும் நிர்பந்திக்க முடியாது.

அதேபோல பொருட்களுக்கான விலையை விவசாயிகள்தான் நிர்ணயிக்க வேண்டும். அதைத்தான் புதிய சட்டம் உறுதி செய்கிறது. நடப்பாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 3.5 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் வேளாண் துறை வளர்ச்சி 3.7 சதவீதமாக இருந்தது.

இவ்வாறு ரமேஷ் சந்த் கூறினார்.

SCROLL FOR NEXT