இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா தொற்று எண்ணிக்கை 93 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவல்:
''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,082 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 93,09,787 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 492 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,35,715 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 87,18,517 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 39,379 ஆகும். இந்நிலையில் கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 நாட்களுக்குப் பிறகு 4.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்தது. இந்நிலையில் நவம்பர் 27 ஆம் தேதி 93 லட்சத்தைக் கடந்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நாட்டின் சராசரித் தொற்று அளவும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.