வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் டெல்லி சலோ போராட்டத்தில், டெல்லி- ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராகக் காவல்துறை சார்பில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி வருவதைத் தடுக்கப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'டெல்லி சலோ' போராட்டம் நேற்று (நவ.26) தொடங்கிய நிலையில், பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் வாகனங்களில் வந்து திரளாகக் கலந்துகொண்டனர். டிராக்டர்களின் வடிவமைப்பைச் சிறிது மாற்றி, ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், தண்ணீர், கம்பளி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்திருந்தனர்.
ஹரியாணாவின் ஷாம்பு எல்லைப் பகுதிக்கு வந்தபோது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். போலீஸ் தடுப்புகளை காகர் ஆற்றில் வீசினர். அப்போது, விவசாயிகளின் குழுவைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலீஸார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். விவசாயிகள் மீது தடியடிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.
நள்ளிரவில் ஹரியாணாவின் சோனிப்பேட் பகுதியில் குழுமி இருந்த விவசாயிகள் மீது தண்ணீர் பீரங்கிகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டது. ஹரியாணாவின் ரோட்டக் - ஜஜ்ஜார் எல்லையில் விவசாயிகள் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோல ஹரியாணா - டெல்லி சாலையில் சிந்து மாகாண எல்லையில் இன்று அதிகாலையிலேயே போலீஸார் குவிக்கப்பட்டனர். அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அருகே கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களைக் கலைத்தனர். சாலையில் முன்னேறிச் செல்ல முடியாதபடி பேரிகேட் தடுப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.