இந்தியா

நிவர் புயல் நள்ளிரவு கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வட மேற்கு நோக்கி 6 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

அடுத்த சில மணி நேரங்களில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது.

நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

          
SCROLL FOR NEXT