இந்தியா

‘‘கூர்மையான அறிவு கொண்டவர்’’ - அகமது படேல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

காங்கிரஸ் எம்.பி. அகமது படேல்(71). கடந்த அக்டோபர் 1-ம் தேதி கரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கரோனாவிலிருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில் குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு
அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் அகமது படேல் உடல்நிலை சீராக இருந்தது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அகமது படேல் தொடர்ந்து இருந்து வந்தார்.
கரோனாவில் பாதிக்கப்பட்ட அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்ககப்பட்டநிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல்உறுப்புகளும் பரவியதால்தான் அவரின் உடல்நிலை மோசமடைந்தது.

இந்தநிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘அகமது படேலின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகள் பொது வாழ்வை கழித்தவர். சமுதயாத்திற்காக பணியாற்றியவர். கூர்மையான அறிவு கொண்டவர்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அகமது படேலின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். வரது மகன் பைசலுடன் பேசினேன். எனது இரங்கலை தெரிவித்தேன். அகமது படேலின் ஆன்மா அமைதியடையட்டும்’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT