இந்தியா

கரோனா தொற்று; 40,000-க்கும் குறைவாக பதிவு

செய்திப்பிரிவு

40,000-க்கும் குறைவான தினசரி கோவிட் தொற்றுகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன

ஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரி கோவிட் தொற்றுகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 37,975 புதிய பாதிப்புகள் நாடு முழுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 8-ஆம் தேதியில் இருந்து, தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக தொடர்ந்து 50,000-க்கும் குறைவாக உள்ளது. 2,134 ஆய்வகங்களுடன் நாட்டின் பரிசோதனை உள்கட்டமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ளும் உறுதியின் வெளிப்பாடாக, கடந்த 24 மணி நேரத்தில் 10,99, 545 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதன் மூலம், இது வரை நாட்டில் செய்யப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13.3 கோடியை தாண்டி 13,36,83,275-ஐ தொட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால், தொற்றுகளின் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. தேசிய தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் இன்று 7 சதவீதத்துக்கும் குறைவாக 6.87 சதவீதமாக உள்லது.

தினசரி தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் வெறும் 3.45 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,314 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 4,38,667 ஆகும். மொத்தம் 86,04,955 பேர் இது வரை குணமடைந்துள்ளனர். இதில் 75.71 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

SCROLL FOR NEXT