மகாராஷ்டிராவில் மனைவிக்கு தொலைபேசியில் முத்தலாக் சொன்ன கணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவரால் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் திருமண உரிமைகள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, சட்டவிரோதமாக முத்தலாக் சொல்லும் கணவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரைச் சேர்ந்த 31 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் பணி காரணமாக துபாய் சென்று சமீபத்தில் அகமது நகர் திரும்பினார். இவரது கணவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 20-ம் தேதி தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கணவர், தன்னுடன் சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை என்று கூறி மூன்றுமுறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வதாக கூறியதாக அந்தப் பெண், போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தொலை பேசியில் முத்தலாக் கூறிய கணவர் மீது அகமது நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.