கட்டாய மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத்தை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநில அரசுகளும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று முன்தினம் கூறும்போது, “இப்போது சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் புற்றுநோயாக லவ் ஜிகாத் உருவெடுத்து வருகிறது. இதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என பல மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இது மதவாத செயல் எனக் கூறுவதை விடுத்து, சமூக நல்லிணக்கத்தைக் காக்க பிஹார் அரசும் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும்” என்றார்.
அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் செயலானது தீவிரவாதம் மற்றும் மத மாற்றத்தைப் போன்ற விஷத்தின் மூல காரணம் ஆகும். இதை வேருடன் களைய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.