பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 லட்சத்தை நெருங்கியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்தது

பிடிஐ


இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 லட்சத்தை நெருங்குகிறது. அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 209 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 90 லட்சத்து 95 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 85 லட்சத்து 21 ஆயிரத்து 217 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.69 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.85 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 12-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 501 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 227ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.46 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டெல்லியில் 111 பேரும், மகாராஷ்டிராவில் 62 பேரும், மே.வங்கத்தில் 53 பேரும், உ.பி.யில் 20 பேரும், ஹரியாணா, கேரளாவில் தலா 25பேரும், உத்தரப்பிரதேசத்தில் 24 பேரும், பஞ்சாப்பில் 23 பேரும், சத்தீஸ்கரில் 22 பேரும், கர்நாடகாவில் 20 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 13.07 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 75 ஆயிரத்து 326மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT