மும்பையில் உள்ள சைத்யபூமியில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, பிறகு உரையாற்றும்போது, டாக்டர் அம்பேத்கரை ‘மகா புருஷர்’ என்று வர்ணித்தார்.
அம்பேத்கரின் கொள்கைகளை பேணி வளர்ப்பதில் எதிர்க்கட்சிகளை விட பாஜக அதிக முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்த பிரதமர், பிற கட்சிகள் இந்த விவகாரத்தில் பாஜக-வுக்கு வாக்களித்தால் இடஒதுக்கீடு முறை ஒழிந்து விடும் என்று தீய பிரச்சாரத்தை மேற்கொள்வதாக சாடினார்.
"அம்பேத்கார் நாட்டுக்குக் கொடுத்ததை ஒருவரும் கொண்டு சென்று விட முடியாது" என்று திட்டவட்டமாக தெரிவித்தார் மோடி.
தாதரில் இந்து மில்சில் அம்பேத்கார் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, தனது உரையின் பெரும்பகுதியை அம்பேத்காருக்கு புகழாரம்சூட்டவே செலவிட்டார்.
"சமூக சீர்திருத்தவாதியான பாபா சாஹேப் வாழ்க்கையில் பல கடினங்களை சந்தித்தவர், போராட்டங்களில் வாழ்ந்தவர், ஆனால் அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் போது எந்த ஒரு கசப்புணர்வோ, பழிவாங்கும் எண்ணமோ அவரிடம் அறவே இருந்ததில்லை.
பாபா சாஹேப் அம்பேத்கர் இல்லையெனில் மோடி எங்கிருந்திருப்பார்? எங்களைப் போன்ற சாதாரண மக்கள் அம்பேத்கர் இல்லாமல் எங்கு இருந்திருப்பர்? தொலைதூர பார்வை இல்லாதபோது அம்பேத்கரை தலித்துகளுக்குச் சொந்தமானவர் மட்டுமே என்று அழைப்பது அவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர் ஒவ்வொருவருக்கும் உரித்தானவர்” என்றார்.
நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.