இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 576 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 585 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 90 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 576 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 89 லட்சத்து 58 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 83 லட்சத்து 83 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.58 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 303 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.95 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 585 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 578 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டெல்லியில் 131 பேரும், மகாராஷ்டிராவில் 100 பேரும், மே.வங்கத்தில் 54 பேரும், உ.பி.யில் 29 பேரும், கேரளாவில் 28 பேரும், ஹரியாணாவில் 30 பேரும், சத்தீஸ்கரில் 23 பேரும், கர்நாடகாவில் 21 பேரும் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 12 கோடியே 85 லட்சத்து 8 ஆயிரத்து 389 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 28 ஆயிரத்து 203 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.