அமித் ஷா | கோப்புப் படம். 
இந்தியா

இனி ஒவ்வொரு மாதமும் அமித் ஷா மேற்குவங்கம் வருவார்: பாஜக அறிவிப்பு

பிடிஐ

அமித் ஷா இனி ஒவ்வொரு மாதமும் மேற்குவங்கம் வருகை தர உள்ளதாகவும் சட்டப்பேரவை தேர்தல்கள் முடியும் வரை தொண்டர்களை உற்சாகப்படுத்தப் போவதாகவும் மேற்கு வங்க பாஜக தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநில இடைத்தேர்தல்களிலும் பிஹாரிலும் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் பாஜக அடுத்துவரும் தேர்தல்களை சந்திக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பாஜக மாநிலத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் புதன்கிழமை கூறியதாவது:

பாஜகவின் இரு மூத்த தலைவர்கள் அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் தேர்தலுக்கு முன்னதாக இனி ஒவ்வொரு மாதமும் தனித்தனியாக மேற்கு வங்கத்திற்கு வருகை தருவார்கள். அவர்கள் இருவரும் கட்சி அமைப்பு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்வார்கள். தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

அமித் ஷா ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக இரு தினங்களும், நட்டா மூன்று தினங்களும் சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை மாநிலத்திற்கு வருகை தருவார்கள். அவர்களின் தொடர்ச்சியான வருகைகள் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும்.

காங்கிரஸ் மற்றும் சிபிஐஎம் ஆகிய இரு கட்சிகளும் நீண்ட காலமாக மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், சிபிஎம் மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு வாய்ப்புகளை மேற்கு வங்க மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் மூன்று கட்சிகளும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆட்சியை வழங்க தவறிவிட்டன, அவை இப்போது பாஜகவால் நிறைவேறும்.

இவ்வாறு திலீப் கோஷ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT