இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததேயில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
''நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததில்லை. பணவீக்கமும் இதுபோன்று கட்டுக்கு அடங்காமல் இருந்தது இல்லை.
நாட்டு மக்களின் நம்பிக்கை அன்றாடம் சிதைந்து கொண்டிருக்கிறது. சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் பிரச்சினையில் சிக்கியுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்ன நடக்கிறது என்று தெரியவில்லை''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல், நாட்டின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டு கடந்த சில மாதங்களாகவே ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனியார் வங்கியான லக்ஷ்மி விலாஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்த வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.