கடும் பனிப்பொழிவு காரணமாக உத்தராகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று மூடப்பட்டது.
டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடும்குளிர் நிலவி வருகிறது. அதேசமயத்தில், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், காஷ்மீர் போன்ற இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு தொடங்கி யுள்ளது.
இதனால் அந்த மாநிலங்களில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் பனியால் சூழப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதி வழியிலேயே திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் அவதி
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயில் முழுவதும் கடந்த சிலநாட்களாக பனியால் மூடப்பட்டிருக்கிறது. மேலும், கோயிலுக்குசெல்வதற்கான பாதையிலும் பனி படர்ந்திருப்பதால் பக்தர் களும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, கேதார்நாத் கோயில் நடை நேற்று சாத்தப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், கோயில் மூடப்பட்டது. பனிப்பொழிவு முடிந்ததும் கோயில் மீண்டும் திறக்கப்படும் என உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது.உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயில் முழுவதும் பனியால் போர்த்தப்பட்டதுபோல் காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக நேற்று அப்பகுதி மக்கள் குளிர்காய்ந்தனர். படம்: பிடிஐ