மனோஜ் ஜா 
இந்தியா

‘‘வெறும் 40 எம்எல்ஏக்களை வைத்துள்ள நிதிஷ்குமாரை எப்படி முதல்வராக ஏற்க முடியும்; விரைவில் மாற்றம் ஏற்படும்’’- ஆர்ஜேடி நம்பிக்கை

செய்திப்பிரிவு

வெறும் 40 எம்எல்ஏக்களை வைத்துள்ள நிதிஷ்குமார் எப்படி பிஹார் முதல்வராக முடியும், விரைவில் முதல்வர் மாறுவார் என ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா கூறியுள்ளார்.

பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதில் பாஜக 74 இடங்களையும், ஜேடியு 43 இடங்களையும் வென்றன. கடந்த 2005ம் ஆண்டுத் தேர்தலுக்குப்பின் ஜேடியு மிகவும் மோசமாகச் செயல்பட்டு 41 இடங்களில் மட்டுமே இந்த முறை வென்றது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி 110 இடங்களில் வென்றது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ஹெச்ஏஎம் கட்சி, விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் பாட்னாவில் நிதிஷ் குமார் இல்லத்தில் இன்று பிற்பகலில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பாஜக சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், எம்எல்ஏ தர்கிஷோர், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவில் பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இதையடுத்து, பிஹார் மாநிலத்தில் தொடர்ந்து 2-வது முறையாகவும், ஒட்டுமொத்தத்தில் 4-வது முறையாகவும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.
இதுகுறித்து ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா கூறியதாவது:

‘‘வெறும் 40 எம்எல்ஏக்களை வைத்துள்ள கட்சியின் தலைவர் எப்படி பிஹார் முதல்வராக முடியும். நிதிஷ்குமாருக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆனால் அவரே மீண்டும் பிஹார் முதல்வராவதை எப்படி ஏற்க முடியும். பிஹாருக்கு வேறு ஒருவர் விரைவில் முதல்வராவார். தானாகவே அது நிகழும். ஒரு வாரத்திலோ, 10 நாட்களிலோ, ஒரு மாதத்திலோ நடைபெறும். ஆனால் அது நடந்தே தீரும்.’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT