கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் கரோனா தொற்று 88 லட்சத்தைக் கடந்தது: குணமடைந்தோர் 82 லட்சத்தைக் கடந்தனர்

பிடிஐ

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 லட்சத்தையும், குணமடைந்தோர் எண்ணிக்கை 83 லட்சத்தையும் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 100 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 88 லட்சத்து 14 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நம்பிக்கையளிக்கும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 81 லட்சத்து 5 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 79ஆயிரத்து 216 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5.44 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 447 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 635ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 105 பேரும், டெல்லியில் 96 பேரும், மே.வங்கத்தில் 53 பேரும், உபியில் 27 பேரும், கேரளாவில் 26 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 12 கோடியே 48 லட்சத்து 36 ஆயிரத்து 189 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 8 லட்சத்து 5ஆயிரத்து 509 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT