இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்தும் முயற்சியாக, வங்கதேச ராணுவத்துக்கு, 20 பயிற்சி பெற்ற குதிரைகள், கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் 10 மோப்ப நாய்களை வங்கதேச ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் பரிசளித்தது.
இந்தக் குதிரைகளும், மோப்ப நாய்களும் இந்திய ராணுவத்தின் குதிரை மற்றும் கால்நடை படைப்பிரிவில் பயிற்சி பெற்றவை. இந்தக் குதிரைகளுக்கும், மோப்ப நாய்களுக்கும் பயிற்சி அளிக்கவும், கையாளவும், வங்கதேச ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்துள்ளது.
குதிரைகள் மற்றும் மோப்ப நாய்களை பரிசளிக்கும் நிகழ்ச்சி, இந்தியா- வங்கதேச எல்லையில் பெட்ரோபோல்-பெனோபோல் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நடந்தது. இந்திய ராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் நரேந்திர சிங் கரோத், வங்கதேச ராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் முகமது ஹூமாயூன் கபீர், வங்கதேச நாட்டுக்கான இந்திய தூதர், பிரிகேடியர் சீமா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, இந்திய ராணுவத்தின் பிரமஸ்த்திரா படைப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் நரேந்திர சிங் கூறுகையில், ‘‘இந்திய ராணுவ மோப்ப நாய்களின் செயல்பாடுகள் சிறப்பானவை. பாதுகாப்பு விஷயத்தில் அண்டை நாடுகளுக்கு உதவ நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். வங்கதேசத்துக்கு தற்போது பரிசளிக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள் கண்ணிவெடிகளையும், தடை செய்யப்பட்ட பொருட்களையும் துல்லியமாக கண்டுபிடிக்கக்கூடியவை’ என்றார்.