2018-ம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ரிபப்ளிக் சேனல் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸாமி உள்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் ஒருவர் செய்த பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்ததால், அந்த வழக்கு முடிக்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த வாரம் புதன்கிழமை கைது செய்தனர்.
தற்போது அர்னாப் கோஸ்வாமி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அமர்வில் நேற்று முழுவதும் விசாரிக்கப்பட்ட நிலையில் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ் ஷிண்டே,எம்எஸ் கர்னிக் அமர்வு அர்னாப் மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்தனர். அதில் “ அர்னாப் கோஸாமி வழக்கில் உயர் நீதிமன்றம் அதன் அசாதாரண அதிகாரங்களை பயன்படுத்தும் அளவுக்கு இந்த வழக்கில் ஏதும் இல்லை. மனுதாரர் கோஸாமி இந்த வழக்கில் வழக்கமான ஜாமீனைப் பெற கூடுதல் நீதிமன்றத்தையே அணுகலாம்” எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே அர்னாப் கோஸாமி சார்பில் அலிபாக் கூடுதல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இன்று காலை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரிக்கப்பட்டு, வரும் வெள்ளிக்கிழமைக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அர்னாப் கோஸாமி, தற்காலிகமாக கரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக மாற்றப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். ஆனால், போலீஸாருக்குத் தெரியாமல் யாருடைய உதவியுடன் மூலம் மொபைல் போன் பெற்று பயன்படுத்தியதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அர்னாப் கோஸாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள தலோஜா சிறைக்கு மாற்றி நீதிமன்றக் காவலில் வைத்தனர்.