கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் 50 ஆயிரத்துக்கு மேல் அதிகரிப்பு: உயிரிழப்பு 577 ஆக உயர்வு

பிடிஐ

இந்தியாவில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்திருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 356 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 84 லட்சத்து 62 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாள்தோறும் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வந்தது நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தது. ஆனால், திடீரென மீண்டும் நேற்று 50 ஆயிரத்துக்கும் மேல் தொற்று அதிகரித்துள்ளது.

இதில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை, 78 லட்சத்து 19 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 92.41 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 622 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6.11 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 577 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 161 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் 55 பேர், டெல்லியில் 64 பேர், சத்தீஸ்கரில் 52 பேர், தமிழகத்தில் 27 பேர், கர்நாடகாவில் 35 பேர், கேரளாவில் 27 பேர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 11 கோடியே 65 லட்சத்து 42 ஆயிரத்து 304 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 13 ஆயிரத்து 209 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT